காவல் நிலையம் முன்பு ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த போலீசாரும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவல்நிலையத்தில் இருந்த தண்ணீர் கேனை எடுத்து வந்து, அந்த இளைஞர் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில், பலத்த காயமடைந்த இளைஞரை போலீசார் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தகவல் அறிந்து போலீஸ் உயரதிகாரிகளும் ஆர்.கே.நகர் காவல்நிலையத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பதும் இவருக்கு 30 வயது ஆகிறது என்பது தெரியவந்தது.

அதாவது, ராஜனை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக ராஜன் காவல் நிலையம் வந்துள்ளார். ஆனால், அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த‌தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜன், காவல்நிலையம் முன்பு தீக்குளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே, ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவரது உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More : வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்த 3 வைட்டமின்களின் குறைபாடு!. எவ்வாறு தடுப்பது?