எடப்பாடி அருகே நள்ளிரவில் கள்ளக்காதலியின் வீட்டிற்குள் நுழைந்து, கணவனை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளியை அடுத்த வேப்பமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். 30 வயதான இவர், கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சதீஷின் மனைவி கீர்த்திகா, அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற 21 வயது இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவர் சதீஷுக்கு தெரியவந்த நிலையில், இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டின் ஹாலிலும், மனைவி கீர்த்திகா அவரது அறையில் குழந்தைகளுடனும் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்காதலன் குணசேகரன், கீர்த்திகாவின் அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த சதீஷ், குணசேகரனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், ’இங்கு எதற்கு வந்தாய்’ என சதீஷ் கேட்டுள்ளார். அதற்கு குணசேகரன் ‘அப்படித்தான் வருவேன்’ எனக்கூறியதாக தெரிகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், சதீஷை அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால், வலி தாங்க முடியாமல் சதீஷ் அலறி துடித்துள்ளார். இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், குணசேகரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, சதீஷ் பூலாம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், கீர்த்திகாவின் கள்ளக்காதலன் குணசேகரனை கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனர்.