தேவூர் சரபங்காநதி தடுப்பணையில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் சரபங்காநதி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி வழியாக தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து செல்கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஏற்காடு சேர்வராயன் மலை பகுதி மற்றும் சரபங்கா நதி கரையோரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அரசிராமணி குஞ்சாம்பாளையம், பழக்ககாரன்காடு, செட்டிபட்டி வழியாக சரபங்கா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து தேவூர் சரபங்கா நதி தடுப்பணை வழியாகத் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடி செல்கிறது.
இதனால் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் உள்ள பெரமாச்சிபாளையம், வெள்ளக்கல் தோட்டம், பாங்கிகாடு, சென்றாயனூர், ஒடசக்கரை, பனங்காடு, கோணக்கழுத்தானூர், மயிலம்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சரபங்கா நதி தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, எள், சோளம், கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிர் வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர்.