தொடர்ந்து பெய்த மழையால் மதுரை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள வலையங்குளம் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின் இணைப்பும் பாதிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால், சிலர் வீட்டை விட்டு வெளியே வந்து வாசலில் அமர்ந்திருந்தனர். நேற்றிரவு 7 மணியளவில், அம்மா பிள்ளை (65) என்ற மூதாட்டி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். மேலும், அவருடன் அம்மா பிள்ளையின் பேரன் வீரமணியும் (வயது 10), பக்கத்து வீட்டுப் பெண் வெங்கட்டி அம்மாளும் (55) இருந்தனர்.
அப்போது, மழையால் நனைந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சுவர் மூவரின் மேல் விழுந்ததால் அவர்கள் மூவரும் படுகாயம் அடைந்தனர். ஆனால், வெங்கட்டி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் அருகிலுள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தெருவில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் துக்கத்தில் உள்ளனர்.