தமிழ்நாடு முழுக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கலாமா என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் எழுந்திருக்கும். இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும், அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது என்றும் நுகர்வோர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், நுகர்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் தனது ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். , வீடுகளை வாடகைக்கு விடப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம். இதற்கான வசதிகளும் மின்சார வாரிய இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றனர்.