அரசு பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளானது குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஊரில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு ஒரு அரசு பேருந்து காலையில் புறப்பட்டது. இந்த பேருந்தை முருகேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இவர் பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்தவர். இந்த பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், இடைகால் பகுதியில் பேருந்து வந்துக் கொண்டிருந்த போது அதன் ஸ்டீரிங் துண்டானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென தாறுமாறாக ஓடி பின்னர் பேருந்து சாலையோரத்தில் உள்ள வயலில் பாய்ந்தது. அங்கு அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். மேலும் பாப்பாக்குடி காவல் நிலையத்திற்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
இந்த விபத்தில் அணைந்தநாடார்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்தப்பா மனைவி ஜெயலட்சுமி. இவருக்கு வயது 42. மற்றும் கபாலிபாறையை சேர்ந்த சுசீலா உள்பட 11-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி என்பவர் பரிதாபமாக உயிர் இறந்தார். இதைதொடர்ந்து, மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிர் இழந்த ஜெயலட்சுமிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் குடும்பத்தோடு மும்பையில் வசித்து வந்தார். தற்போது கோவில் திருவிழாவுக்காக அவர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது தான் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.