தந்தை தன்னுடன் வேலைக்கு வரச்சொன்னதால், வீட்டில் கோபித்துக் கொண்டு ரூ.17 லட்சம் பணத்துடன் பிளஸ் 1 மாணவன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கையில் பையுடன் வந்த பள்ளி மாணவன், அங்கு நின்றிருந்த சின்னதிருப்பதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜமாணிக்கத்திடம் சென்று தங்குவதற்கு இங்கு விடுதி ஏதேனும் கிடைக்குமா..? என்று கேட்டுள்ளார். மேலும், எனக்கு யாரும் இல்லாததால், தனக்கு ஒரு வேலை வாங்கித் தருமாறும் கூறியுள்ளார்.

பின்னர், அந்த மாணவனை ஆட்டோ ஓட்டுநர் ராஜமாணிக்கம், தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவரிடம் விசாரித்தபோது, மாணவன் கொண்டு வந்த பையில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம், உடனே மாணவனை கன்னங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, மாணவனிடம் போலீசார் விசாரித்து, பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தனர். அதில், மொத்தம் ரூ.17,65,000 இருந்துள்ளது. இதையடுத்து, மாணவனிடம் அஸ்தம்பட்டி உதவி ஆணையர் அஸ்வினி விசாரணை நடத்தினார். விசாரணையில், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, மாணவன் 11ஆம் வகுப்பு படித்ததும், சிறுவனின் தந்தை சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சியில் லேத் பட்டறை வைத்திருப்பதும் தெரியவந்தது.

தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் மகனை, பட்டறையில் வேலை செய்ய வருமாறு தந்தை அழைத்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த 17 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாணவன் சேலம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், மாணவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர் ராஜமாணிக்கத்திற்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.