பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க பரிகாரம் என்ற பெயரில் சுமார் 10 லட்சம் வரை வாங்கிக்கொண்ட நிலையில் பரிகாரம் பலனளிக்காத ஆத்திரத்தில் வைத்தியரை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன். நாட்டு வைத்தியரான இவர், ஜோதிடம் பார்த்து வருகிறார். இந்தநிலையில் 8ம் தேதி ஜோதிடர் மனைவி விஜயகுமாரி வெளியில் சென்றுள்ளார். அதன் பின் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜான் ஸ்டீபன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஜான் ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கட்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற பெண்ணுக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் கலையரசியை விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பரிகாரம் என்று கூறி ஜோதிடர் சுமார் 10 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறியுள்ளார். இருப்பினும், கணவர் சேர்ந்து வாழவில்லை என்பதால் பரிகாரம் பலனளிக்கவில்லை என்று கூறி ஜோதிடரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர் அலைகழித்து வந்ததால் ஆத்திரமடைந்த கலையரசி, பேஸ்புக் நண்பரான நம்பிராஜன் என்பவரின் உதவியுடன் ஜோதிடரை கடுமையாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. வாக்குமூலத்திற்கு பின்னர் கொலை சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.