எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பை துண்டித்ததால் பண்ணையில் இருந்த 14,000 கோழிகள் இறந்துபோன சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே திருவங்கிடபுரம் கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் ஏற்பட்ட துயரமான சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. செல்லமுத்து பாண்டியன் என்ற விவசாயி கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் சுமார் 15 ஆயிரம் கோழிகளை அவர் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் கோழிப்பண்ணைக்காக மின் கட்டணம் ரூ.22,233 செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பணத்தை செலுத்த சென்றபோது, பென்டிங்கில் உள்ள தொகையும் சேர்த்து ரூ.49,719 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் மொத்த பணத்தையும் செலுத்தியதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்துள்ளனர்.

இதனால், பண்ணையில் உள்ள குளிர்சாதன சாதனம் இயங்கவில்லை. இதனால், வெப்பம் தாங்க முடியாமல் 14,000 கோழிகள் அடுத்தடுத்து, இறந்துவிட்டன. இந்த கோழிகளின் இறப்பால் செல்ல முத்துபாண்டியனுக்கு ரூ.40 லட்சத்துக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்லமுத்துபாண்டியன் கூறுகையில், “நான் பணத்தை செலுத்தியிருந்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது மிகப்பெரிய இழப்பு. அரசாங்கம் கருணையுடன் எனக்கு உதவவேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மின்வாரிய ஊழியர்கள் மீது மரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more “அட இவனுங்க அட்ராசிட்டி தாங்க முடியலப்பா”..!! காதலியை மடி மீது தூக்கி வைத்து டூவிலரில் சாகசம் செய்த காதலன்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!