சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம், பெரியமுத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மகள் சத்யா (18) நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவர், கடந்தாண்டு 12ஆம் வகுப்பு முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால், அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், நடப்பாண்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஜலகண்டாபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
இதற்கிடையே மன வேதனையில் இருந்த சத்யா, கடந்த 31ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, எறும்பு பவுடரை தண்ணீரில் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட சத்யா, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் பெற முடியாததால், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வைத்து திமுக அரசு இன்று வரை அரசியல் செய்து வருகிறது.
தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்..? திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது என்று உதயநிதி ஸ்டாலின் சினிமா வசனம் பேசினார். தற்போது இத்தனை மரணங்களுக்கும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று சொன்னீர்களே.. அவை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்தால், உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.
தொடரும் நீட் மரணங்களைத் தமிழ்நாடு தாங்காது..! நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அந்த எண்ணம் உங்களுக்கு துளியாவது இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.