அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன். எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஆர்யமா சுந்தரம், ‘அ.தி.மு.க.வின் உள்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையீடு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. சிவில் கோர்ட்டுக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன. மேலும் தற்போது தடையை நீக்கக்கோரி மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் அ.தி.மு.க.உறுப்பினர்கள் கூட கிடையாது. அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் எந்த பிளவும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் ஏற்கனவே என்ன ஆதரவு இருந்ததோ அதே ஆதரவு அப்படியே உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.

பிற மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி வாதிட்டனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தினார்கள்.

அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Readmore: “காதலியுடன் ஊர் சுத்தனும்; அவளுக்கு செலவு பண்ண காசு வேணும்ல”!. கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கூறிய காரணம்!. ஷாக்கான போலீஸ்!