எடப்பாடியில் கோவில் தர்மகர்த்தா வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாமி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தாவாக அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்ளார். அதன்படி, கோவிலுக்கு சொந்தமான நகை, பணம், பொருட்கள் உள்ளிட்டவைகள் தர்மகர்த்தா என்ற முறையில் இவரது வீட்டில் வைக்கப்படுவது வழக்கம். அதாவது, விஷேஷ நாட்களில் சாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சுப்ரமணி வீட்டுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு வருகிறது. சுப்ரமணி மளிகை கடையும் நடத்திவருகிறார்.

இந்தநிலையில், அவர் வழக்கம்போல், அதிகாலை தனது மனைவியுடன் சுப்ரமணி மளிகை கடைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு சென்று பார்த்த சுப்ரமணி, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பிரோவில் வைக்கப்பட்டிருந்த சாமிக்கு சொந்தமான 6 பவுன் நகைகள் கொள்ளைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் பதறிபோன சுப்ரமணி, உடனடியாக எடப்பாடி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: எடப்பாடியில் சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திய கும்பல்!. பதறிய காதல் கணவன்!. நடந்தது என்ன?. சிசிடிவியில் வெளியான பகீர் காட்சி!