பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணுக்கு கருவை கலைக்க உரிமை உண்டு என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால், சில பெண்கள் கர்ப்பமாகியும் அதனை கலைக்க முடியாமல் தற்கொலைக்கு ஆளாவது மற்றும் கலைப்பதற்கு அனுமதி கேட்டும் நீதிமன்றத்தை நாடுவது தொடர் கதையாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இதுபோன்ற வழக்கு ஒன்று உத்தரப் பிரதே மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அப்போது இளம்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 19 வார கர்ப்பிணியாக உள்ளார் என்றும், மைனர் சிறுமியான அவர் குழந்தையை பெற்று வளர்க்கும் பக்குவத்தில் இல்லை என்றும் வாதிட்டார். பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமானது மனுதாரருக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வைப்பது என்பது அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமையையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், பாலியல் வன்கொடுமையால் உருவான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவ கருத்தரிப்பு சட்டம் பிரிவு 3(2)-ன் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு மருத்துவரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது என்று கூறிய நீதிபதிகள் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Readmore: இருவேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்தால் மட்டுமே செல்லும்!. நீதிமன்றம் அதிரடி!