பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளின் சொத்துரிமை குறித்துக் கோவை வழக்கறிஞர் பிரீத்தி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இன்று பல பெற்றோர்கள் தங்கள் கடைசி சேமிப்பு வரை பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் வருமானம் இல்லாத வயதான காலத்தில், பிள்ளைகளுக்கு பெற்றோரை கவனித்துக் கொள்வது சுமையாகத் தெரிகிறது. இதனால் மருந்துச் செலவுக்குக் கூட பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் நிலைமைக்குப் பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். இது குறித்துக் கோவை வழக்கறிஞர் பிரீத்தி சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்.

வழக்கறிஞர் பிரீத்தி கூறுகையில், வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிப்பது பிள்ளைகளின் சட்டப்பூர்வமான கடமை. பெற்றோருக்குச் சொத்து இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிள்ளைகளிடமிருந்து மாதாந்திரப் பராமரிப்புத் தொகையைப் பெறச் சட்டத்தில் வழி இருக்கிறது. நீதிமன்றம் மூலமாகவே இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதைதொடர்ந்து, முதுமைக் காலத்தில் பிள்ளைகள் இருந்தும் தனித்து விடப்படும் முதியோர்களின் நிலை மிகவும் வேதனைக் குரியது. பாசத்துடன் வளர்த்த பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளின் எதிர்காலமும் நல்லதாக இருக்காது என்பதற்கு நிறைய உதாரணங்களைப் பார்க்கிறோம். சிலர் சொத்து முழுவதையும் பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, மருத்துவச் செலவுக்குக்கூட கஷ்டப்படுவதைக் காண்கிறோம்.

இந்நிலையில், இப்படிப்பட்ட பெற்றோர்கள் சட்டரீதியாக அணுகினால், பிள்ளைகளுக்கு எழுதி வைத்த சொத்துக்களை எளிதாகத் திரும்பப் பெறலாம். பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007, பிரிவு 23-ன் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தால் போதும். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, உடனடியாகச் சொத்துரிமையை ரத்து செய்து பெற்றோரிடமே ஒப்படைப்பார். எனவே, பிள்ளைகள் உங்களைக் கொடுமைப்படுத்தினாலும், அதைச் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உரிமைகளை நிலைநாட்டச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.

Read more அப்படிப்போடு..!! இனி இன்டர்நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்..!! PhonePe கொண்டு வரும் அசத்தல் வசதி..!!