தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டி, திமுக – பாஜகவின் மறைமுகக் கூட்டணியை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவும் பாஜகவும் மறைமுகக் கூட்டணி என்பதை நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். ஊழல் செய்தவர்கள் டெல்லிக்குப் பயணம் செய்தால், அவர்கள் மீதான வழக்குகளை மறைக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். இப்போது ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதும் அதை நிரூபிப்பது போல உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் அவசரமாக டெல்லி சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தாலும், அது நிரந்தரத் தடையல்ல. எனவே, அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தடுக்க, ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின், இந்தாண்டு மட்டும் ஏன் கலந்து கொள்ள வேண்டும்..?
இதற்கு காரணம் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தான். ரூ.1000 கோடி ஊழல் வெளியில் வந்தால் தன் குடும்பத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அமலாக்கத்துறை வழக்குகள் பற்றி பேசவில்லை என்று ஸ்டாலின் மனசாட்சியுடன் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா..?. முதலமைச்சர் ஸ்டாலின், தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்று தெரிந்தும், பாஜக அவரை ஏன் வரவேற்க வேண்டும்..? இது இருவருக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டணியின் வெளிப்பாடு.
நிதி ஆயோக் கூட்டத்தின் புகைப்படத்தில், பாஜகவுடன் வெளிப்படையான கூட்டணியில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன் வரிசையில் நிற்கிறார். அதேபோல, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் முன் வரிசையில் நிற்கிறார். இது என்ன அர்த்தம்? ஒருவருக்கு வெளிப்படையான கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை. இது சாதாரண நிகழ்வு போலத் தோன்றினாலும், திமுக – பாஜக இடையேயான மறைமுகக் கூட்டணியையும், பேர அரசியலையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் பலர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன்?. இது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன் குடும்பத்தின் நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத் தோல்வி உறுதி என்பதால், பாஜகவுடன் கூட்டணி வைத்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டத் தயாராகிவிட்டார்கள்.
வருங்காலத்தில் பாஜகவுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, திமுக சரணடைந்துவிட்டது. இந்த ஊழல் அரசு தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மக்கள் ஆட்சியை அமைக்கும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.