பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (45). இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு வயது 40. இவர்கள் இருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான ஆறுமுகம் மற்றும் மகேந்திரன் ஆகியோருடன் நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொது வழித்தடத்தில் உள்ள ஒரு கழிவறையை அகற்றுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தற்காலிகமாக கழிவறையை இடிக்க வேண்டாம் என்றும், இது குறித்துப் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அய்யனார் தரப்பினரிடம் கூறியுள்ளனர். ஆனால், நேற்று மகேந்திரன் அய்யனாருக்குச் சொந்தமான அந்தக் கழிவறையைப் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அய்யனார் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். மேலும், காவல்துறையினர் மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா..!! ஆயிரத்தை கடந்த பாதிப்பு..!! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!!