நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக சின்னுசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி 31-வது வார்டை சேர்ந்த வீ.சின்னுசாமி என்பவர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு புரட்சி வாழ்த்துகள் என்றும் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
லஞ்சம், ஊழலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியுள்ள வீ.சின்னுசாமி, பல ஆண்டுகளாக மீட்க முடியாத நீரோடையை 3 ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியால் தூர்வார நடவடிக்கை எடுத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தியுள்ளார். ஏழை, எளிய மக்கள் இலவச சட்ட உதவிகள் மூலம் பயன்பெறும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளார்.