விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 21). அதேபோல், கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 19). இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால், சிவகாசியில் வாடகைக்கு தனி வீடு எடுத்து இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணவேணியின் தாத்தா அவருக்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சிவகாசி பேருந்து நிலையத்தில் படுத்திருப்பதாகவும், தன்னை பார்க்க வருமாறும் அழைத்துள்ளார். இதையடுத்து, அவரை பார்க்க பழனிசாமியும், கிருஷ்ணவேணியும் சென்றுள்ளனர். பின்னர், அவரை தங்களது பைக்கில் ஏற்றிக்கொண்டு பேரநாயக்கன்பட்டியில் இறக்கிவிட்டுள்ளனர்.

அப்போது, அங்கு காரில் வந்த கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள், மாமா ஜெயக்குமார் உள்பட 5 பேர் பழனிசாமியையும், கிருஷ்ணவேணியையும் வலுக்கட்டாயமாக தங்களது காரில் கடத்திச் சென்றனர். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அனைத்து செக்போஸ்ட்களும் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, குறிஞ்சாங்குளம் பகுதியில் இருவரையும் இறக்கி கடுமையாக தாக்கிவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர், அங்குவந்த போலீசார் இருவரையும் மீட்டு, வெம்பக்கோட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதற்கிடையே, காரில் தப்பிச் சென்ற பெண்ணின் தாய் அய்யம்மாள் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!! பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை..!!