பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

மும்பையில் 1937-ம் ஆண்டு பிறந்த இவர் 10-ம் வயதிலேயே குடும்பத்தில் பல கடினமான சூழல்களை சந்தித்திருக்கிறார். ஆம், இவருக்கு 10 வயது இருக்கும்போதே இவரின் தந்தையாரும் தாயாரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிறகு, பாட்டியின் அரவணைப்பில்தான் ரத்தன் டாடா வளர்ந்திருக்கிறார். கார்னல் பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பை முடித்ததும் இவருக்கு ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ரத்தன் டாடாவின் கவனம் தன்னுடைய குடும்ப நிறுவனத்தில்தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய குடும்ப நிறுவனமான `டாடா குருஸ்’ நிறுவனத்திலேயே தனது பணியைத் தொடங்கினார் .

`Born in silver spoon’ என்ற வாக்கியம் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதாவாது பெரிய பணக்காரர்களின் குடும்பத்தில் பிறந்து அந்த ஆடம்பர வாழ்க்கையிலேயே வாழ்பவர்களை இந்த வாக்கியத்தைக் கொண்டு குறிப்பிடுவார்கள். ரத்தன் டாடா நினைத்திருந்தால் அவரும் இப்படியான சூழலிலேயே தனது பணியை தொடங்கியிருக்கலாம். ஆனால், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வெடிப்பு உலை மற்றும் சுண்ணாம்புக்கல் கலவையை மேற்பார்வையிடும் வேலையைதான் முதலில் முழுமையாக கவனித்து வந்திருக்கிறார். இந்த பணியின் மூலமாக 1962-ம் ஆண்டு டாடா குழுமத்திற்குள் வந்தார். ஜே.ஆர்.டி டாடாவுக்கு பிறகு 1991-ம் ஆண்டு டாடா குழுமத்தின் சேர்மேன் பதவியில் அமர்ந்தார்.

கிட்டதட்ட ரத்தன் டாடா தலைமையில் குழுமத்தின் வருவாய் 40 மடங்கு உயர்ந்திருக்கிறதாம். டெட்லி – டாடா டீ, டாடா மோட்டார்ஸ் – லேண்ட் ரோவர் ஜாகுவார், டாடா ஸ்டீல் – கோரஸ் ‘ போன்ற முக்கியமான இணைப்பு நிறுவனங்கள் இவர் தலைமையில் இருக்கும்போதுதான் உருவாகின. நடுத்தர குடும்பங்களுகாக 1 லட்ச ரூபாய்க்குள் கார் டிசைன் செய்ய வேண்டும் என இவர் கனவுடன் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டப்படி ரத்தன் டாடாவின் கனவுடாடா நானோ’ கார் மூலம் நனவாகியிருக்கிறது.

மக்களின் நலனுக்காக பல லட்ச ரூபாயை நன்கொடையாக அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறார். கிட்டதட்ட `டாடா சன்ஸ்’ குழுமத்தின் வருவாயிலிருந்து 66 சதவிகிதத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என கிராமப்புற வளர்ச்சிக்காகவும் சில முன்னெடுப்புகளை ரத்தன் டாடா தலைமையில் கையில் எடுத்திருக்கிறார்கள். அவர் படித்த கார்னெல் பல்கலைகழகத்துக்கு இந்தியாவிலிருந்து பலரும் படிப்பதற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பல்கலைகழகத்துக்கு மொத்த தொகையை இவர் வழங்கியிருக்கிறார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவால் கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார். அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர்மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், ” தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று கூறியுள்ளார்.

Readmore: மருத்துவப் படிப்பில் அடுத்தடுத்து தோல்வி..!! விரக்தியில் எடப்பாடி மாணவி விபரீத முடிவு..!!