தம்பதிகளிடையே ஏற்பட்ட தகராறில் தங்கையை அடித்த கணவரை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர். பகுதியை சேர்ந்தவர் அஜய்(30), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இருவரும் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், தம்பதிகளிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்துள்ளது. இந்தநிலையில், நேற்றும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜய், மனைவி பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து அழுதுகொண்டே அண்ணன் அன்பு செல்வத்திற்கு போனில் கூறியுள்ளார் பிரியா.
தங்கையின் பாசம் கண்ணை மறைத்த நிலையில், ஆத்திரத்தில் கோபமாக இருந்த அன்பு, தங்கையின் வீட்டில் இருந்த அஜயை சரமாரியாக தாக்கி கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் தங்கையின் கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் அன்பு செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.