இணையவழி குற்றம் அல்லது சைபர் குற்றம் என்பது, இணையம் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோதச் செயல்களைக் குறிக்கிறது. இணையவழி குற்றங்களில், கணினி ஒரு இலக்காகவோ அல்லது குற்றச்செயலை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது. அதிவேகமாக இணைய பயன்பாட்டால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க செல்போன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியில் வளர்ச்சி அடைந்துள்ளதால், இது இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

இந்த இணைய வழி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது வாட்ஸ் அப்பில் புதிய மோசடி அரங்கேறி வருகிறது.

ஹேக்கர்கள் வாட்ஸ் அப்பில் படங்கள் அல்லது மீம்ஸ்களை நமக்கு அனுப்பி அதன் மூலம் மொபைல் போனில் மால்வேர் அல்லது ஸ்பைவேரை நிறுவ மோசடி செய்கின்றனர். இந்த மோசடியில் நிறையப் பேர் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், சமூக ஊடகக் கணக்குகள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடி அதன் மூலம் மோசடி செய்கின்றனர்.

ஒரே ஒரு கிளிக்கில் உங்கள் வங்கிக் கணக்கு காலியாகலாம். அதாவது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிடுவார்கள். மோசடி செய்பவர்கள் கவர்ச்சிகரமான அல்லது வேடிக்கையான படங்கள் அல்லது மீம்ஸ்களை உங்களுக்கு அனுப்புவார்கள். அவை உங்களுக்கு சாதாரணமான மெசேஜாகத் தெரியும். ஆனால் நீங்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்தவுடன், உங்கள் தொலைபேசியில் ஒரு ஆபத்தான மென்பொருள் உங்களுக்கே தெரியாமல் இன்ஸ்டால் ஆகிவிடும்.

இது உங்கள் கீபோர்டில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் பதிவு செய்யும். அது உங்கள் வங்கி கடவுச்சொல், OTP (ஒரு முறை கடவுச்சொல்), கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் பிற ரகசிய தகவல்களை திருட வழிவகுக்கும். இந்த மென்பொருள் உங்கள் தொலைபேசியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் ஹேக் செய்துவிடும். இது உங்களை உளவு பார்க்கும் ஒரு கருவியாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வகையான சைபர் மோசடிக்கு நீங்கள் பலியாகிவிட்டால் பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.

உங்களுக்கு அனுப்பப்படும் மீம் எவ்வளவு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், உங்களுக்குத் தெரியாத அல்லது சந்தேகம் இருக்கக்கூடிய எண்களிலிருந்து எந்த படங்களையும் அல்லது செய்திகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான படங்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் மோசடியில் சிக்கிவிடுவீர்கள். உங்கள் தொலைபேசியில் நம்பகமான வைரஸ் தடுப்பு அல்லது பாதுகாப்பு செயலியை இன்ஸ்டால் செய்து அதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

Readmore: பெற்றோர்களே கவனமா இருங்க!. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் மாயம்!. தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்!.