ஏழுமலையான கோவில் பிரசாதம் லட்டில் மாட்டுக்கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளநிலையில், வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 முதல் 2024 வரையிலான ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை வைத்தார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதையடுத்து, அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகளில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டது உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யோகம் நடத்தப்பட்டது.யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தெளிக்கப்பட்டது.இந்த நிலையில், அனைத்து பக்தர்களும் தங்களது வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ” என மந்திரம் படிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்புவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Readmore: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்..!! பட்டியலில் இடம்பெற்ற வாழை, தங்கலான்..!!