ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது முதியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முதியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றால் உடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து செல்ல வேண்டும் என்பது பொதுவான அறிவுரையாக உள்ளது. ஏனென்றால், பல்வேறு இடங்களில் மோசடிக்காரரர்கள் எந்த நேரத்திலும் திசைதிருப்பி பணத்தை திருடும் சம்பவம் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், தற்போது தனியாக வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற மூதாட்டியின் கவனத்தை திசைத்திருப்பி நூதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் காமநாயக்கன்பட்டி, ராஜா பட்டறையை சேர்ந்தவர் வசந்தா. இவரது மகள் நிஷாந்தி, செவிலியராக பணிபுரிந்து விடுதியில் தங்கி வருகிறார். 58 வயதான வசந்தா அதே கல்லுாரியில் பிரிண்டிங்கில் பணிபுரிந்து கொண்டு மகளுடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், வசந்தா புதிய வீடு கட்ட முடிவு செய்து அதற்காக தனது பிஎப் பணத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி வங்கிக் கணக்கிற்கு பணம் கிரெடிட் ஆகியுள்ளது.

இதையடுத்து, அழகாபுரம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள ஏடிஎம்மில் ரூ.500 எடுத்துக்கொண்டிருந்தபோது, அருகில் வந்து வசந்தாவை நகரும்படி ஒருவர் கூறியுள்ளார். பரிவர்த்தனை கேன்சல் ஆகவில்லை என்று அறியாமல் வசந்தாவும் ரூ. 500 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் நிஷாந்தி போனுக்கு ரூ. 2 லட்சம் எடுத்ததாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்தி வசந்தாவிற்கு தொடர்புகொண்டு கேட்டுள்ளார். ஆனால், அவர் ரூ.500 மட்டுமே எடுத்ததாக கூறியுள்ளார்.

பணத்தை இழந்ததை அறிந்த வசந்தா, செய்வதறியாமல் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அங்கு வங்கி கணக்கு எண்ணை முடக்கிவிட்டதாகவும் நாளை வந்து புகார் தெரிவிக்கும்படியும் கூறி அனுப்பினர். ஆனால், மீண்டும் வங்கி கணக்கில் இருந்து ரூ.40000 எடுத்ததாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சியடைந்த வசந்தா அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்டபோது, ‘இது சைபர் கிரைம் பிரிவு என்பதால் அங்கு செல்லுங்கள்’ என கூறியுள்ளனர். அவர், அங்கு சென்றபோது, ‘இது மோசடி வழக்கு. இங்கு வராது. அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுங்கள்’ என கூறி அங்கும் இங்குமாக அலைகழித்துள்ளனர். ஒருவழியாக புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணையில் அருகில் நின்றவர் பின் நம்பரை தெரிந்துகொண்டு, வசந்தாவிடம் வேறு கார்டை மாத்திக்கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Readmore: புதுமண தம்பதியினர் சென்ற வேன் விபத்து!. ஏற்காட்டிற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம்!.