இந்தியாவில் இனி அனைத்து ஏடிஎம்-களிலும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம்-களில், தற்போது ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இதனால், சாதாரண மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சிறிய தொகையை எடுக்க முடியாமல் திண்டாடி வருவதாகப் பல புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன. இந்தப் புகார்களை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, தற்போது ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதைதொடர்ந்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 30, 2025-க்குள் அனைத்து வங்கிகளும் தங்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளைக் கட்டாயம் வைக்க வேண்டும். இதன் முதல் கட்டமாக, குறைந்தது 75% ஏடிஎம்-களில் ஒரு கேசட்டில் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகள் விநியோகிக்கப்படும்படி அமைக்க வேண்டும்.
மேலும், 2026 மார்ச் 31-க்குள், அனைத்து ஏடிஎம்-களிலும் 90% குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகள் விநியோகிக்கும்படி அமைக்குமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள ஏடிஎம்-களில் நான்கு விதமான நோட்டுகளை வைக்கும் வசதி இருந்தாலும், பெரும்பாலானவற்றில் ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த முக்கிய முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் இனி சில்லறைப் பணத்துக்கு சிரமப்பட வேண்டியதில்லை.