சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மஜ்ரா கொல்லப்பட்டியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு, முதுகலை மருத்துவ படிப்பு, நர்சிங் படிப்பு, பாரா மெடிக்கல் பிரிவுகளில் ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு பயின்று வருகின்றனர். இங்கு மருத்துவ ஆய்வக டெக்னீசியனாக வேலு என்பவர் பணிப்புரிந்து வருகிறார். இந்தநிலையில், பாரா மெடிக்கல் படிப்பு பிரிவில் டிப்ளமோ பிரிவில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதாவது, மாணவிகள் மீது கைப்போட்டு பேசுவது, தொட்டு தொட்டு பேசுவது, சக மாணவிகளின் போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக மாணவிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக மாணவிகள், மருத்துவக் கல்லூரியில் முதல்வர் தேவி மீனாளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாக கமிட்டி தலைவர் மருத்துவர் சுபா தலைமையில் விசாக கமிட்டி குழுவினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மாணவிகளிடமும் லேப் டெக்னீசியன் வேலுவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாள் ஆகியோரிடம் விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லேப் டெக்னீசியன் வேலுவை சஸ்பெண்ட் செய்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் தேவி மீனாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.