கூட்டுறவுத் துறை கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமா, இல்லையா என்பது பற்றி கூட்டுறவுத் துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

சிபில் ஸ்கோர் என்பது ஒருவர் ஏற்கெனவே வேறு வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றிருக்கிறாரா என்பதையும், அவருக்கு அதிக கடன் பென்டிங் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதாவது, கடன் கொடுப்பதற்கு முன் விண்ணப்பதாரரின் கடன் வரலாற்றைச் சரிபார்க்க இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும், ஆனால் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதால் மட்டும் கடன் மறுக்கப்படாது.

இந்நிலையில், உழவர் கடன் அட்டை திட்டம் (KCC) என்பது விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் ஒரு திட்டம். 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், விவசாயிகளுக்குத் தேவையான குறுகியகால வேளாண் கடன்களைச் சரியான நேரத்தில் வழங்குவதாகும். இதன் மூலம், விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளுக்குத் தேவையான நிதியைப் பெற முடியும். மேலும், விவசாயம் சார்ந்த கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு போன்ற இதர தேவைகளுக்கும் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதையடுத்து, தமிழ்நாட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன், நகை அடமானத்தின் பேரில் பயிர்க்கடன் (KCC AH), மற்றும் கால்நடைப் பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடன்கள் அதிகளவில் வழங்கப்படுவதால், இக்கடன்கள் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் பின்பற்றப்பட வேண்டும்.

கால்நடை வளர்ப்புக்கான கடன் பெறுபவர்கள் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கடன், பெரும்பாலும் நடைமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வழங்கப்படுகிறது. கடன் வாங்கிய நாளிலிருந்து ஓராண்டுக்குள் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் வரை எந்த பிணையும் இல்லாமல் கடன் வழங்குவது போல், இந்தக் கால்நடை வளர்ப்பு கடன்களும் வழங்கப்படலாம். வேளாண் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ரூ. 2 லட்சத்திற்கு உட்பட்டு இந்த கடன் வழங்கப்படும்.

இதைதொடர்ந்து, பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு அல்லது அது சார்ந்த தொழில்களுக்கான நடைமுறை மூலதனக் கடன் என இரண்டும் சேர்த்து ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பயிர்க்கடன் எதுவும் வாங்காமல், கால்நடை வளர்ப்பு மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு மட்டும் கடன் தேவைப்பட்டால், அந்தக் கடன் தொகையும் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அரசு வட்டி ஊக்கத்தொகை வழங்கும். மேலும், சொந்த நிதியைப் பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்க வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசால் வட்டி மானியம் வழங்கப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD) இந்தத் திட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

Read more “நான் மாறிட்டேன்.. என்னை விட்டுரு”..!! கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக்காதலன்..!! ஓட்டல் அறையில் கிடந்த அழுகிய உடல்..!! நடந்தது என்ன..??