ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வரவில்லையென்றால் பாமக எம்.எல்.ஏ. பதவியை தாம் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சேலம் அருள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார். மறுநாள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட, தங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினாலும், கட்சியை யார் வழிநடத்தப் போகிறர்கள் என்ற விவாதம் இருந்துக் கொண்டே இருந்தது.

பிறகு கடந்த ஏப்ரல் மாதம் “நானே கட்சியின் தலைவர்” என்று ராமதாஸ் அறிவித்தார். அது வரை தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக அறிவித்தார். தன்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் தெரிவித்து தருமபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, “நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், நான் என்ன தவறு செய்தேன்” என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதையடுத்து, இன்று அன்புமணி தலைமையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தைலாபுரத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டிய போது, அக்கூட்டத்தை பாமக மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்த நிலையில், அன்புமணி தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முதலில் ராமதாஸின் ஆதரவாளராக அறியப்பட்ட பாமக பொருளாளர் திலகபாமாவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டார். மேலும் பாமகவின் புதிய பொருளாளராக சையத் மன்சூர் உசேனை நியமித்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது, இன்று நடைபெற்ற தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை (சேலம் மேற்கு தொகுதி) அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் சேலம் அருள் எம்.எல்.ஏ. கூறியதாவது: அரசியலே வேண்டாம் என மன உளைச்சலில் இருக்கிறோம். வெளியில் சொல்ல முடியவில்லை. மிகப் பெரிய நெருக்கடியான காலம் எங்களுக்கு. தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி பாமக. அப்படியான நிலையில் இந்த மாதிரி பிரச்சனைகள் எழுந்திருப்பதை என்னவென்று சொல்வது? இது நெருக்கடியான காலகட்டம். இதை நாங்கள் கடந்து வருவோம்.

பாமக எத்தனையோ நெருக்கடிகளைக் கடந்த இயக்கம். அதனால் இந்த நெருக்கடியையும் கடந்து வருவோம். பாமகவில் டாக்டர் ராமதாஸ்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர். நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லவே இல்லையே. டாக்டர் ராமதாஸை சந்திக்கத்தான் இன்று வந்தோம். டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு கடவுள் என்று பேசியுள்ளார்.

Readmore: ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு செம குட் நியூஸ்..!! உங்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்..!! எப்படி தெரியுமா..?