தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை, நேற்று (ஜூலை 30) மாலை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அவ்வாறாக வெளியேற்றப்படும் நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேமித்து பயன்படுத்த வேண்டும் என ரூ.673 கோடி செலவில் முதல்கட்டமாக 100 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதில், 56 ஏரிகள் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உபரி நீரை ஏரிகளில் நிரப்ப முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை 7 மணியளவில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையம் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக எம்.காளிபட்டியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி பின்னர் படிப்படியாக 56 ஏரிகளுக்கும் இந்த தண்ணீர் செல்லவுள்ளது. இத்திட்டத்தின் காரணமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய பல்லாயிரகனக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.