ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் மேற்கொள்வதற்கான இறுதி தேதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் “ஆதார் கார்டு” ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது. வங்கியில் கணக்கு திறக்க வேண்டும் என்றாலும், சிம் கார்டு வாங்க வேண்டுமானாலும், அரசு நலத்திட்டங்களை பெற வேண்டுமானாலும், இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆதார் இல்லாமல், பல முக்கிய வேலைகளை செய்வதில் தடை ஏற்படலாம். அதுவும் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் சரியாக இல்லையெனில் (பெயர், வயது, முகவரி, பாலினம் போன்றவை) அது பெரிய சிக்கலை உண்டாக்கும்.
இதுதொடர்பாக மத்திய அரசு கூறுகையில், ஒவ்வொரு நபரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இதனால் உங்கள் ஆதார் எப்போதும் சரியானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், இப்போது மக்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய முடியும்.
இந்த வாய்ப்பு ஜூன் 14, 2025 தேதி வரை மட்டுமே உள்ளது. ஜூன் 15ஆம் தேதிக்குப் பின் யாராவது ஆதார் அப்டேட் செய்ய விரும்பினால், அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இலவச அப்டேட் ஆன்லைனில் தான் செய்ய முடியும். https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்துப் புதுப்பிக்கலாம்.