மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடிய சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளம் பகுதியில் வந்தபோது, பேருந்தின் இடது பக்க முன்சக்கரம் திடீரென வெடித்தது. இதில், சுமார் 100 மீட்டர் தூரம் வரை அந்த சக்கரம் சாலையில் உருண்டு ஓடியது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சறுக்கி ஓடியது. இந்த பேருந்தில் மொத்தம் 55 பேர் பயணித்தனர். திடீரென சக்கரம் வெடித்ததும் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.
ஆனால், பேருந்து ஓட்டுனர் கண்ணன் (வயது 54) தன்னுடைய சாமார்த்தியத்தால் பேருந்தை ஒரு பக்கம் நிறுத்தி பெரிய விபத்தை தவிர்த்தார். இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதைத்தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பேருந்து மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கும், போக்குவரத்துத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், பேருந்து பராமரிப்பு சரியாக இல்லை என்பதால் தான், இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.