ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் மாறி மாறி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் சொர்ணபுரி பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி, திருச்சியை சேர்ந்த லோகநாயகி என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை என்பதாலும், அவரது செலோன் அழைப்பு துண்டிக்கப்பட்டதாலும், சந்தேகமடைந்த தோழிகள் மற்றும் விடுதி வார்டன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அவரிடம் யார் யார் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர். அதில், திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண் பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பகுதியில் கடைசியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த திருச்சி வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அந்த பெண்ணை கொலை செய்ததாகவும், உடலில் வெட் ஊசி செலுத்தியதாகவும், அதுமட்டுமின்றி ஏற்காடு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், அங்கு 60 அடி பாலம் பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, வனத்துறையினர் உதவியுடன் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.