10ஆம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் வசித்து வருகிறார் ஜெகத்குமார் என்பவர். அவருக்கு ஜனனி என்னும் மகள் இருந்தார். அவர் 10-ம் வகுப்பு முடித்திருந்தார். ஜெகத்குமாரின் அக்கா வாணியின் மகள்கள் லக்ஷயா (வயது 16) மற்றும் சரண்யா (வயது 11) ஆகியோரும் கோடை விடுமுறைக்காக புலிவலம் வந்திருந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாலை சுமார் 5 மணியளவில், வாணியும் அவரது இளைய மகள் சரண்யாவும் வீட்டின் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு வாலிபர் திடீரென ஜெகத்குமாரின் வீட்டுக்குள் நுழைந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜனனியை வயிறு, கழுத்து என உடல் முழுவதும் குத்தினார். இதை தடுக்கப் போன லக்ஷயாவையும் சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் ஜனனி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லக்ஷயா படுகாயமடைந்து அலறினார். சத்தம் கேட்டு வாணியும் அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்த அந்த வாலிபர் உடனே வீட்டின் கதவை உள்ளே பூட்டிக்கொண்டார்.

மேலும், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜனனி பிணமாகக் கிடந்தார். அந்த வாலிபர் தனக்குத்தானே கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து சோளிங்கர் மற்றும் கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், படுகாயமடைந்த லக்ஷயாவையும் தற்கொலைக்கு முயன்ற வாலிபரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 21) என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை ஒருதலைக் காதலால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு செம குட் நியூஸ்..!! உங்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்..!! எப்படி தெரியுமா..?