சிக்னலில் நின்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் வயது (51). இவரது மனைவி சசிகலா வயது (44). இருவரும் தாம்பரத்தில் உறவினரின் நிகழ்ச்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிக்னல் போடப்பட்டதால் நின்றனர். அப்போது சென்னை மார்க்கமாக பேப்பர் லோடு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தம்பதியினரின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறு கீழே விழுந்த சசிகலா மீது லாரியின் டயர் ஏறியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கருப்பசாமி(20) என்பவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.