கடலூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மீன் குழம்பில் விஷம் கலந்து கொலை செய்த மனைவியின் செயலால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவரது மனைவி விஜயா. திருமணம் நடந்து 27 வருடங்கள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. கோவையில் தங்கி கல்லூரி ஒன்றில் சமையல் வேலை பார்த்து வரும் கோபால கண்ணன், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்றுவருவது வழக்கம். இந்தநிலையில், மனைவி விஜயாவிற்கும், எதிர்வீட்டை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தேவநாதனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகளும் இருக்கும் நிலையில், இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த கோபாலக்கண்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன் மகனிடம் கூறியுள்ளார். இதனால், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுதொடர்பாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்ட நிலையில், திடீரென கோபால கண்ணன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து விஜயாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கோபால கண்ணனை தீர்த்துக்கட்ட தேவநாதனும், விஜயாவும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மீன் குழம்பு வைத்து அதில் பூச்சி மருந்து கலந்து கோபால கண்ணனுக்கு விஜயா பரிமாறியுள்ளார். இதனை அறியாமல் உணவை சாப்பிட்ட அவர் பரிதாபமாக பலியானார். இதையடுத்து, தேவநாதன், விஜயா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Readmore: TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!. தமிழக அரசு கொடுத்த ஹேப்பி நியூஸ்!