1963இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம், நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு இன்று நிறைவேறியுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன..? திட்டம் கடந்து வந்த பாதை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் 2000 கனஅடி வெள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இதன்மூலம் 31 ஏரிகளும், 1,045 குளம், குட்டைகளும் நீராதாரத்தை பெறும். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவர்.
விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையானது, 1963ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒலித்தது. பின்னர், அனைத்து தேர்தல் காலக்கட்டங்களிலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தது அத்திக்கடவு – அவிநாசி திட்டம்.
ஒருவழியாக கடந்த 2016இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, இத்திட்டத்திற்கான ஆய்வு பணிகளுக்காக 3 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கி ஒப்புதல் வழங்கினார். பின்னர் பணிகள் தாமதமாக, 2017ஆம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2018 ஆண்டு, இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கு அடுத்தாண்டே அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டத்திற்காக 1,652 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார்.
அந்தாண்டின் பிப்ரவரி மாதம் அவரது தலைமையிலேயே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 2021 சட்டசபை தேர்தலின் போது 80% பணிகள் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், திட்டம் செயல்பட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த திட்டத்திற்காக 1,046 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் இத்திட்டத்திற்காக 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் பராமரிப்பு பணியை 5 ஆண்டு காலம், ‘எல் அண்ட் டி’ நிறுவனத்தினர் மேற்கொள்ளவுள்ளனர். பல தசாப்தங்களாக வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கை நிறைவேறுவது, அவர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.