இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், குறிப்பாக யுபிஐ பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. யுபிஐ மூலம் பணம் அனுப்ப எந்தக் கட்டணமும் இல்லை என்பதால், மக்கள் இதை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், சமீபகாலமாக யுபிஐ சேவைகள் அடிக்கடி முடங்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் இப்போது யுபிஐ-யை நம்பி இருப்பதால், இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சனையை சரிசெய்யவும், யுபிஐ சேவை சீராக இயங்குவதை உறுதி செய்யவும், யுபிஐ பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் என்பிசிஐ (NPCI) சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வரும்.
மேலும், இனிமேல் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே உங்கள் வங்கி இருப்பை யுபிஐ செயலிகள் மூலம் சரிபார்க்க முடியும். தற்போது இதற்கு எந்த வரம்பும் இல்லை. நீங்கள் இரண்டு யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு செயலியிலும் தலா 50 முறை (மொத்தம் 100 முறை) வங்கி இருப்புச் சரிபார்க்கலாம். உங்கள் மொபைல் எண்ணுடன் எந்தெந்த வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இதற்கு முன்பு இந்த சேவைக்கு எந்த வரம்பும் இல்லை.
ஒரு பரிவர்த்தனை வெற்றிகரமாக நடந்ததா..? இல்லையா..? என்பதை கூகுள் பே, போன்பே போன்ற பேமெண்ட் சேவை நிறுவனங்கள் (Payment Service Providers) இனி தாமதமானாலும் தாமே சரிபார்க்க அனுமதிக்கப்படும். பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகள் தங்கள் சேவைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலிகளில் ஏதாவது தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம், கட்டுப்பாடுகள் அல்லது புதிய பயனர்களைச் சேர்க்கத் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், அனைத்து பேமெண்ட் சேவை நிறுவனங்களும் ஆகஸ்ட் 31, 2024-க்குள் ஒரு விரிவான தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் யுபிஐ சேவை தொடர்ந்து சீராக இயங்குவதை உறுதி செய்யும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்பதால், இவற்றை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.