பெங்களூரில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ போதைப் பொருட்களை ஓமலூரில் போலீசார் விரட்டி பிடித்து பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்ய நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் அதிவேகமாக சேலம் நோக்கி சென்றது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்றனர்.
இதையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மூட்டை மூட்டையாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.