சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே நிலவாரப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருக்கு 8 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளார். அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்த சிறுவன், கோடை விடுமுறை என்பதால், கடந்த திங்கள் கிழமை மாலை வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மாயமான சிறுவன், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மாயமான சிறுவன் குறித்து மல்லூா் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாா் அளித்தனர்.

தொடர்ந்து சிறுவனை தேடிக்கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் சிறுவனின் சடலம் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லூா் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவன் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வாவ்!. மொபைல் UPI மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு இப்படியொரு சிறப்பு சலுகையா?. மத்திய அரசு சூப்பர் திட்டம்!