எடப்பாடி அருகே தடப்பிரச்சனை காரணமாக பெண்கள் மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவபட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி மற்றும் காளியப்பன் குடும்பத்தினர் இடையே கடந்த சில ஆண்டுகளாக தடப்பிரச்சனை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எடப்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காளியப்பன் மகன்கள் மயிலேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோர் அடியாட்களை வைத்து கடந்த 28ஆம் தேதி வழித்தடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமியின் மனைவி உத்தரம்மாள், அவரது மருமகள் ஷாலினி உள்ளிட்டோர் சென்று கடந்த 40ஆண்டுகளுக்கும் மேல் உள்ள வழிப்பாதையை மறைத்து ஏன் கம்பி வேலி போடுறீங்க என கேட்டுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கம்பி வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி மதியம் 2 மணியளவில் காளியப்பன் மகன்கள் மயிலேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோர் 40-க்கும் மேற்பட்ட கூலிப்படை கும்பலை அழைத்து வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வழித்தடத்தை அழிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது இதனை தடுத்த தீபா, ஷாலினி, இந்திராணி, உத்தரம்மாள், மூதாடி மினியக்கால் (90) ஆகியோரை கூலிப்படை கும்பல் கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூதாட்டி மினியக்கால் மற்றும் ஷாலினி ஆகியோருக்கு இரத்த காயம் ஏற்பட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, ஜேசிபியின் கண்ணாடியை பெண்கள் சிலர் கற்களை எரிந்து அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read More : பாறைகளை தகர்க்க தோட்டா..!! வெடித்து சிதறியதில் சுக்குநூறான சுற்றுச்சுவர்..!! குறுக்குப்பாறையூர் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!!