சேலத்தில் தலைக்கேறிய மதுபோதையில் சுயநினைவை இழந்து சாலையோரத்தில் +1 மாணவி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இருப்பினும், கல்லூரிகள், பள்ளிகளுக்கு கூட மாணவிகள் மருந்து அருந்தி செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், அதை வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுகின்றனர். அந்தவகையில், சமீபத்தில்கூட கோவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. கோவை, காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் 25 வயது மதிப்புடைய பெண், மதுபோதையில் எங்கே இருக்கோம் என்பதே அறியாமல் கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதேபோன்ற மற்றொரு சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அழகாபுரம் பகுதியில், சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணின் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக விசாரித்த அழகாபுரம் போலீசார், அந்த பெண் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும், மது போதையில் அவர் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த மாணவியை 2 பேர் பைக்கில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டுவிட்டு சென்றதாகவும், அவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று உறுதியானது. இந்நிலையில், மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த ராமர்குட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.