கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் 800க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் மேகதாது முதல் ஒகேனக்கல் இடையிலான 60 கிலோமீட்டர் தூரம் இடது கரை தமிழகத்திலும், வலது கரை கர்நாடகாவிலும் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குறுவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படும்.
மேலும், ராசிமணல் அணையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும் மின்சார தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்று இரண்டு மாநிலத்திலும் நிலத்தடி நீர் பெருகுவதோடு, காட்டு விலங்குகள் தண்ணீருக்காக கிராமப் பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும்.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு போதுமான நீர் வழங்கப்படாத சூழ்நிலையில் தற்போது ராசிமணலில் அணைக்கட்டும் திட்டத்திற்கு கோரிக்கையும், தேவையும் அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் ராசிமணல் அணை திட்டம். அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை ராசிமணலில் அணை கட்ட எந்த அரசும் முன் வரவில்லை.
இதனால் என்ன பயன்: ராசிமணலின் வலதுகரை கா்நாடகப் பகுதி என்பதால், ராசிமணலில் அணை கட்டினால் பெங்களூரின் தண்ணீர் தேவைக்காக இந்த அணையிலிருந்து 10 டிஎம்சி வரை தண்ணீரை எடுத்துக் கொள்ள இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இங்கு செய்யப்படும் மின் உற்பத்தியை இரு மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அணையின் கட்டுமானம், நிா்வாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ராசிமணலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது பகுதி உள்ளது. அங்கு கர்நாடகா அணை கட்டினால் மொத்த உபரிநீரும் தமிழகத்துக்கு வராது, தமிழகம் அழிந்துபோகும். ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் அதிக அளவில் மரங்கள் இல்லை. வன விலங்குகள் நடமாடும் பகுதியும் இல்லை.
இங்கு அணை கட்டினால் அணையின் வலதுகரையில் இருந்து கர்நாடகா மாநில பகுதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும். இருமாநிலங்களும் இணைந்து மின் உற்பத்தி செய்து பங்கிட்டுக் கொள்ள முடியும். இதை, கர்நாடகா மாநில விவசாயிகள் குழுவினரிடம் இதை எடுத்துரைத்துள்ளோம். அடுத்த கட்டமாக கர்நாடகா மாநிலம் மாண்டியா அல்லது மைசூரில் இரு மாநில விவசாயிகளும் ராசிமணல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.
ராசிமணலில் கட்டும் அணை இரு மாநில நிலப்பரப்பிலும் அமையும் பொதுவான இடம். இந்த இடத்திலிருந்து பெங்களூர் நகரத்திற்கு தேவையான குடிநீரும் 10 டிஎம்சி வரை வழங்கலாம். தண்ணீரைச் சேமித்து வைத்து மேட்டூர் அணைக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் தொடர்ந்து விட முடியும்.
Readmore: சேலம் பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து..!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்..!!