திருப்பதியில் இனி ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே, லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. திருப்பதி லட்டு பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து வருகின்றனர். தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கூடுதல் லட்டு வேண்டுமென்றால், லட்டு கவுன்டரில் நேரில் சென்று ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரை இந்த நடைமுறையே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க இனி ஆதார் அட்டை கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இனி ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50-க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : இனி ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை..!! அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்..!!