“சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகளவில் வேலைகளை செய்ததால், அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால், தற்போதுள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்துள்ளதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 18 என்ற அளவில் உள்ளது. அவர்களை விட மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம்.

மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு உடற்பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் பலனளித்துள்ளது. சுகப் பிரசவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளோம். இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். மருத்துவர்கள் சமூக வலைதளங்கள் வழியே அரசு மருத்துவமனை சேவைகளை பிரபலப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More : கல்லீரல் அழற்சி நோய்..!! அறிகுறிகள் இதுதான்..!! குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுங்க..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!