காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் எந்த உறுப்பினரும் கலந்து கொள்ளாத நிலையில் மகாலட்சுமி மேயர் பதவியில் நீடிப்பார் என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார். 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 33 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூலை 29 காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. ஆனால், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, கூட்டத்துக்கு வந்த 34-வது வட்ட கவுன்சிலர் பிரவீன் குமார், மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்திருப்பதை கண்டித்து கடிதம் வழங்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். இந்நிலையில், நீண்ட நேரம் கடந்தும் எந்த மாமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளாத நிலையில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி என மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தார்.