ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் ஒரு மாதத்திற்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் ராமண்ணா பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதான பிரமிளா என்ற தீபிகா, கடந்த ஒரு மாதமாக காணாமல் போயிருந்தார். அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில், இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தற்போது தெரியவந்துள்ளது. விசாரனையில் தெரிய வந்தது என்னவென்றால், தீபிகாவின் கணவர் இறந்த பிறகு, அவர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இவருக்கு நிஜாம் பட்டணத்தைச் சேர்ந்த ஈகா வெங்கடேஸ்வர ராவ் என்பவருடன் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. ஆனால், வெங்கடேஸ்வர ராவின் மைத்துனரான நாக பாபுவுடனும் தீபிகாவுக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தீபிகா, நாக பாபுவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனால் கோபமடைந்த வெங்கடேஸ்வர ராவும், நாக பாபுவும் சேர்ந்து தீபிகாவைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். பந்திலபள்ளி திமசமுத்திரம் சாலையில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மது அருந்தச் செய்து, பீர் பாட்டிலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து, உடலை அங்கேயே புதைத்து விட்டனர்.
இதைதொடர்ந்து, தீபிகா காணாமல் போனது குறித்து உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈகா வெங்கடேஸ்வர ராவும், நாக பாபுவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, இருவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கூறிய தகவலின் பேரில், புதைக்கப்பட்டிருந்த தீபிகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து சிராலா டி.எஸ்.பி மொயின் கூறுகையில், “இந்த வழக்கில் இருவரும் திட்டமிட்டுக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரமிளா என்ற தீபிகாவின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டனர்” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.