தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள பொதுமக்களில் ஏராளமானோர் இப்போது அவர்களுடைய மின் கட்டணத்தை ஆன்லைன் (Online EB bill Payment) சேவை மூலம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக மின் நிலையங்களில் அவர்களுடைய மின்சார கட்டணங்களை செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் சிலர் நேரடியாக மின் நிலையம் சென்று அவர்களுடைய மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. இன்னும் சில மக்களிடம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த தேவையான ஸ்மார்ட்போன்கள் (Smartphone) இல்லை. இன்னும் சிலருக்கு ஆன்லைனில் எப்படி மின்சார கட்டணத்தை செலுத்துவது என்ற செயல்முறை தெரியவில்லை. இன்னும் சிலர் ஆன்லைன் மோசடிகளுக்கு பயந்து, பாதுகாப்பு நலன் (security details) கருதி நான் நேரிலேயே சென்று மின் கட்டணத்தை செலுத்திவிடுகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். இருப்பினும் பலர் ஆன்லைன் மூலமே கட்டணத்தை செலுத்துகிறார்கள்.
இந்தநிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமும் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான போலியான குறுந்தகவல்கள் அண்மை காலங்களில் அதிகளவில் உலா வரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலியின் வாயிலாக மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மொபைல் போனிற்கு வரும் அதிகாரப்பூர்வமற்ற லிங்க் வழியாக பொதுமக்கள் பலரும் மின்கட்டணத்தைச் செலுத்தி, தங்கள் பணத்தை இழந்துள்ளனர். தெரியாத லிங்க் மற்றும் எண்களைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே தற்காப்பின் மிகச் சிறந்த வழியாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான TNEB செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும் புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களுடைய மொபைல் எண்ணைத் தான் வழங்க வேண்டும். மாறாக முகவர்களின் எண் அல்லது கணிணி மையத்தின் எண்ணை வழங்குதல் கூடாது. உங்கள் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மின்சார பில் தொகையை மின்சார வாரியத்தின் வலைதள முகவரிக்குச் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.