சேலத்தில் மகன் வைத்திருந்த மதுவை திருட்டுத்தனமாக குடித்த தந்தை, அதில் விஷம் கலந்திருப்பதை அறியாமல் உயிரிழந்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, புனல்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 52. இவருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது மூத்த மகன், 21 வயதான கதிரவன், கார் சர்வீஸ் சென்டரில் பெயிண்டராக வேலை செய்கிறார். கதிரவனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மதுவை வாங்கி, குளிர்பானத்தில் கலந்து, தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருப்பார். இதை அறிந்த தந்தை கண்ணன், மகன் வைத்திருக்கும் மதுவில் இருந்து கொஞ்சம் எடுத்து குடித்துவிட்டு, அதில் தண்ணீர் கலந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது தினமும் நடந்து வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று, வழக்கம் போல் கண்ணன் தனது மகனின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த மதுவை எடுத்து குடித்துவிட்டு, அதில் தண்ணீர் கலந்தார். பின்னர், கதிரவனும் அதை எடுத்து குடித்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, “என்னை குடிகாரன் என்று சொல்கிறார்கள். எனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்பதால் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டேன்” என்று கூறினார்.
பின்னர் இதைக் கேட்ட தந்தை கண்ணன், “நானும் அந்த மதுவை குடித்தேன்” என்று கூறி மேலும் அதிர்ச்சி அளித்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தந்தை, மகன் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கதிரவன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.