விவசாயத்தில் லாபம் குறைவாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு ஒரு அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விவசாயம் செய்வது இப்போதெல்லாம் சாதாரணமான ஒன்று இல்லை. இதனால், பலரும் சிரமப்படுகிறார்கள். எனவே, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் சூரியசக்தி மின் திட்டம். இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, நீர்ப்பாசனத்திற்கு டீசலைப் பயன்படுத்தும் செலவைக் குறைத்து, சூரிய சக்தியைப் பயன்படுத்தவும் உதவுகிறது. மழை இல்லாததால் பயிர்கள் கருகினாலும், சூரியசக்தி மின்சாரம் மூலம் விவசாயிகள் இனி நிலையான வருமானம் ஈட்டலாம்.
இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சோலார் பம்ப் செட்களை அமைப்பதன் மூலம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த மத்திய அரசு ஊக்கமளிக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் நிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்தால், அதை மின் வாரியத்திற்கு விற்கலாம். விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் மின் வாரியத்திற்கு, மத்திய அரசு ஒரு யூனிட்டுக்கு 40 காசு அல்லது 1 மெகாவாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.6.60 லட்சம் என, இவற்றில் எது குறைவோ, அதை 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கும். இது மின் வாரியத்திற்கு ஒரு பெரிய சலுகையாக அமையும்.
இதையடுத்து, தமிழ்நாட்டிலும் மத்திய அரசின் இந்த சூரியசக்தி மின் நிலையங்களை ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் அமைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. பிரதம மந்திரி குசும் திட்டத்தின் (PM KUSUM) கீழ், 11 கிலோ வோல்ட் மற்றும் 22 கிலோ வோல்ட் மின் வழித்தடங்களைக் கொண்ட துணை மின் நிலையங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள தரிசு நிலங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
எனவே, உங்கள் நிலத்தை மின் நிலையம் அமைக்க குத்தகைக்கு வழங்க விரும்பும் விவசாயிகளுக்கு மின்சார வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தரிசு நிலங்கள் அல்லது சாகுபடி செய்ய முடியாத நிலங்களை குத்தகைக்குக் கொடுத்தால், அதற்கு குத்தகைத் தொகை வழங்கப்படும். ஒருவேளை, நிலத்தின் உரிமையாளரே இந்த மின் நிலையத்தை அமைக்க விரும்பினால், அதற்கும் அனுமதி உண்டு. இந்த மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின் வாரியம் ஒரு யூனிட் ரூ.3.28-க்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கும், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து மேலும் அறிய, உங்கள் பகுதி மின் வாரிய அலுவலகத்தை அணுகலாம்.
Read more பான் கார்டின் 10 இலக்க எண்களில் இத்தனை ரகசியங்களா?. முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்!.