6 வயது மகளுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் லோகநாதன். இவருக்கு வயது 38. இவரது மனைவியின் பெயர் வாணி. இவர்களுக்கு 6 வயதில் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். இவர், லோகநாதன் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். மேலும், ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இந்த தொழிலில் முதலீடு செய்வதற்காக, அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியிருந்தார்.
இதையடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் அவருக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு மிகவும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த லோகநாதன், நேற்று முன்தினம் இரவு தனது மகள் ஜஷ்வந்திகாவுடன் புட்லூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் அமர்ந்திருந்த அவர்கள், இரவு 11 மணியளவில் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தனர். இதில் லோகநாதனும், அவரது மகள் ஜஷ்வந்திகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த வந்த ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, லோகநாதனின் மனைவி வாணி, அவர் கணவரும் மகளும் வீடு திரும்பாததால் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது தான் இந்த சோகமான செய்தி அவருக்கு தெரியவந்தது.
மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி ஆகியவையே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. லோகநாதன் யாரிடம் கடன் வாங்கினார், யாரேனும் அவரை மிரட்டினார்களா என்று போலீசார் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.