வாத்து மேய்க்க குத்தகை முறையில் வேலைக்கு சென்ற சிறுவன், திடீரென உயிரிழந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் உடலை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் பிரகாசம், அங்கம்மா என்ற தம்பதியர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து கொண்டுள்ளனர். இத்தகைய ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு பணத் தட்டுப்பாடு இருந்தது. இதனால் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த முத்து – தனபாக்கியம் என்கிற தம்பதியரிடம் ரூ.15,000 கடன் வாங்கி இருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தங்கள் 9 வயது மகன் வெங்கடேசை, முத்துவின் வீட்டிற்கு ஒரு வருட குத்தகை முறையில் வேலைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவன், திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியில் உள்ள வாத்து மடையில் வேலை செய்து வந்தான். இந்நிலையில், சிறுவன் வெங்கடேசுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. கடந்த 30 நாட்களுக்கு முன்பு அவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான்.
பின்னர் இறந்த சிறுவன் வெங்கடேசின் உடலை, அவரது பெற்றோருக்கு தெரியாமல், முத்து, அவரது மனைவி மற்றும் மகன் ராஜசேகர் ஆகியோர் காஞ்சிபுரம் அருகே உள்ள புஞ்சை அரசந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு பாலாற்றங்கரையில் புதைத்து விட்டனர். சிறுவன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரச்சனை ஏற்படும் என நினைத்து இப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுவனின் தாயான அங்கம்மா, தனது மகனைப் பற்றி விசாரிக்கையில், முத்துவின் குடும்பத்தினர் மழுப்பலாக பதிலளித்துள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அங்கம்மா சத்தியவேடு போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசு இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், முத்து, தனபாக்கியம், மற்றும் ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், வெங்கடேசின் உடலை வெளியே தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வீட்டு உரிமையாளருடன் கள்ளக்காதல்!. காரை ஏற்றி கணவனை போட்டுத் தள்ளிய மனைவி!. விசாரணையில் பகீர் தகவல்!